தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பதிவாகிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ஏராளமான பயிர்கள் அழுகிவிட்டது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வயல்வெளிகளில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அதிக பொருட்சேதத்தை ஏற்படுத்தி விட்டது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். அவரது உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து பயிர் சேதம் குறித்த அறிக்கையை அளித்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்.பி. வழங்கினார்.
அதில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களை பார்வையிட 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்த மத்திய குழுவினர் நேற்று சென்னை வந்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு தலைமைச் செயலாளர் இறையன்பு, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விவரங்களை விரிவாக எடுத்து கூறினார்கள். அதன் பிறகு சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு மத்திய குழுவினர் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை மத்திய குழுவினருக்கு விளக்கி கூறினார்.
இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று இன்றும் நாளையும் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர்.
Link Source: https://bit.ly/32zR5iZ