இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Karen Andrews, தி பேஸ், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரு அமைப்புகளையும் தீவிரவாத இயக்கங்களாக ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தி பேஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வதோ, உறுப்பினராக உள்ளதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
தீவிர நிறவெறி கொள்கையை பின்பற்றும் தி பேஸ் அமைப்பு ,பல்வேறு நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அன்மையில் ஆஸ்திரேலியாவிலும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் கரேன் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் 17 வயது சிறுவர்களையும் தங்களுடைய இயக்கத்தில் சேர்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா போன்ற நாடுகளில் தி பேஸ் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக இந்த அமைப்பை ஆஸ்திரேலியா தீவிரவாத இயக்கமாக அறிவித்து அதன் செயல்பாடுகளுக்கும் முற்றிலுமாக தடை விதிப்பதாகவும் இனி இந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோன்று லெபனானை மையப்படுத்தி இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு தீவிரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
லெபனானை மையப்படுத்தி இருந்தாலும் இந்த அமைப்பு பல்வேறு உலக நாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. பாலஸ்தீனிய ஹமாஸ் படைப் பிரிவுக்கு உதவி வருவதாக கருதப்படக் கூடிய இந்த அமைப்பு, ஒரு அரசியல் பிரிவு இயக்கமாக கருதப்படுகிறது.
ஆயுதமேந்திய குழுக்களை தான் பெரும்பாலும் தீவிரவாத இயக்கங்களாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. முதல்முறையாக இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்து இருப்பதன் மூலமாக ஒரு அரசியல் பிரிவு இயக்கத்தையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்பட கூடிய நிலையில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என்று ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த அமைப்புடன் தொடர்பு வைத்துக் கொள்வதோ, பயிற்சி பெறுவது,நிதி உதவி வழங்குவது, உறுப்பினராக நீடிப்பது, இனி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதிகபட்சமாக 25 வருடங்கள் வரைக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Link Source: https://ab.co/3l1r56g