ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகையில் 16 வயதை கடந்தவர்களில் 85% சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு வருகை தர விரும்பக்கூடிய சுற்றுலா பயணிகள் மாணவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் போன்றவற்களுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அனுமதி வழங்குவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. தகுதி வாய்ந்த விசாவுடன் இவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என்றும் அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என்றும், மேலும் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டீவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த விசா குறித்த விபரங்கள் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு மாகாணமும் தனிமைப்படுத்தல் குறித்த மாறுபட்ட விதியை பின்பற்றுகிறது. நியூ சவுத் வேல்ஸ் விக்டோரியா போன்ற மாகாணங்கள் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருடன் மேற்கொண்ட உடன் படிக்கையின் விளைவாக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலமாக தகுதி வாய்ந்த பணியாளர்கள் சுமார் இரண்டு லட்சம்பேர் ஆஸ்திரேலியாவிற்கு வருவார்கள் என்றும் இதன் மூலமாக பொருளாதார ரீதியாக ஆஸ்திரேலியா சந்தித்த தேக்கம் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என்று பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 16 வயதை கடந்தவர்கள் 85% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்து 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி ஆஸ்திரேலியா கல்வித் துறை மூலமாக சுமார் 37 பில்லியன் டாலர் அளவிற்கு வருவாய் ஈட்டியது என தெரியவந்துள்ளது.
Link Source: https://bit.ly/3x9CtC5