இதில், 2 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்தன.
ஜம்முவில் விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.
இங்கு ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இங்கு வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி, உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் உளவு பார்க்கும் முயற்சியை தடுக்கவும் தனிக்குழு செயல்பட்டு வருகிறது.
எல்லையில் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து வந்து ஆளில்லா விமானங்கள் உளவு பார்க்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு விமானப்படை தளத்தின் மீது நேற்று அதிகாலை 1.40 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை 6 நிமிடங்கள் இடைவெளிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்த 2 வெடிகுண்டு தாக்குதலும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டு இருப்பது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு குண்டு தொழில்நுட்ப பிரிவு செயல்படும் கட்டிடத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதனால், மேற்கூரை சேதமடைந்தது. மற்றொறு குண்டு திறந்தவெளியில் விழுந்து வெடித்தது.
இந்த வெடிகுண்டு தாக்குதலால் பெரிய அளவில் சேதம் இல்லை, உயிரிழப்புகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு வீரர்களுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். உச்சகட்ட பாதுகாப்பில் உள்ள ஒரு விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து ஜம்மு காஷ்மீர் டிஜிபி, விமானப்படை உயரதிகாரிகள், தடவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், என்ஐஏ அதிகாரிகள் ஆகியோர் விமானப்படை தளத்திற்கு விரைந்தனர். தடவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக தடயங்களை சேகரித்தனர்.
உயரதிகாரிகள் அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை துணை தலைமை ஏர் மார்ஷல் எச்.எஸ்.அரோராவிடம் தொலைபேசியில் நிலைமையை கேட்டறிந்தார்.
இந்திய விமானப்படையின் உயர்மட்ட விசாரணைக் குழுவும், என்ஐஏவும் இந்த தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வருகின்றன.
எல்லையில் இதுவரை துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு, மோதல் போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. தற்போது, நாட்டிலேயே முதன்முறையாக ஆளில்லா விமானம் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எல்லையில் ராணுவ வீரர்கள் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.
2016 ல் பதான்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://bit.ly/3w1xHEq