சென்னை கேகே நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வகுப்புகளை நடத்திய ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களை மேற்கொண்டதாக முன்னாள் மாணவிகள் சிலரும் பெற்றோர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக இதே போன்று மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று பள்ளி நிர்வாகி முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு பின்னர் மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடரும் என்றும், ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
Link Source: https://bit.ly/3oRjdVD