ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிட்னி நகரத்தின் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. முக்கிய சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
சிட்னியின் புறநகர் பகுதியான கேம்டனில் பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதுதொடர்பாக பேசிய மாநில அவசரகால சேவைத்துறை அமைச்சர் ஸ்டெப்னி கூக், தற்போது மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர நிலையாக தற்போதைய சூழ்நிலை கருதப்படுகிறது. வரக்கூடிய நாட்களிலும் இதுபோன்ற மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட இடங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சிட்னியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், எதுவும் நேராது என்று எண்ண வேண்டாம். தற்போதைய சூழல் மிகவும் கடினமாக உள்ளது. அதனால் பள்ளி விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்படுவதாக ஊடகங்களிடம் நியூ சவுத் வேல்ஸ் அவசரகால சேவைத்துறை அமைச்சர் ஸ்டெப்னி கூக் கூறினார்.