ஆஸ்திரேலியாவின் Northern Territory –ல் தொற்று பரவலின் தாக்கம் குறைவாக இருந்து வந்த நிலையில் சமீப நாட்களில் தொற்று பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட Tennant Creek பகுதியைச் சேர்ந்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் Natasha Fyles கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இதனை கொரோனா பாதிப்பு மரணம் என கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதனை அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Natasha Fyles தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ள நிலையில் அதில் 15 பேர் ஆக்சிஜன் பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 626 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாள் தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் சற்று உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை காரணமாக தொற்று பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
வீட்டில் இருந்து ரேபிட் கருவி வழியாக பரிசோதனை மேற்கொள்வோர் உடனடியாக அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்கள் வெளியில் சுற்றித் திரிவதன் மூலம் புதிய தொற்றுப் பரவல் மையங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Laramba, Alice Springs, Milikapiti உள்ளிட்ட இடங்களில் புதிய தொற்று பாதிப்பு பதிவாகி வரும் நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. Milikapiti பகுதியில் நடைமுறையில் உள்ள முடக்க நிலை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், மருத்துகூமனைகளின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் உரிய நிதி ஆதாரத்தை ஏற்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக NT சுகாதாரத்துறை அமைச்சர் Natasha Fyles கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3IKjLW1