ஆஸ்திரேலிய தேசிய தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 314,192 பேர் இதுவரை இரண்டு டோஸ் ஃபைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும், அதில் 57.5 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு முதல் மூன்று நாட்களில் பக்க விளைவுகளினால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவான பக்க விளைவுகளாக உடல் சோர்வு தலைவலி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்களது இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட நபர்களை ஆய்வு செய்து முடிவுகள் தெரிவித்ததன் அடிப்படையில், தடுப்பூசி எடுத்துக்கொண்ட இடத்தில் வீக்கம் மற்றும் வலி, கடுமையான உடல் சோர்வு, தலைவலி, எலும்பு மூட்டுகளில் கடுமையான வலி, குளிர் காய்ச்சல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. Murdoch குழந்தைகள் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் நோய்தடுப்புப் பிரிவு செவிலியர் Rachael McGuire பக்க விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் முதல் டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக்கொண்ட அவருக்கு லேசான உடல் சோர்வு மற்றும் தலைவலி இருந்ததாகவும் அதன் பின்னர் இயல்பாக வேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இரண்டாவது ஃபைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட Rachael McGuire, 12 மணி நேரத்திற்கு பிறகு தொடர்ந்து கடுமையான உடல் சோர்வு தலைவலி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.
38 வயதான Rachael McGuire, கடும் உடல் சோர்வு மற்றும் தலைவலி காரணமாக தனது கணவரை விடுப்பு எடுக்கச் சொல்லி தான் ஓய்வில் இருப்பதாகவும், இவை எதிர்பார்த்த பக்கவிளைவுகள் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதே மாதிரியான பக்கவிளைவுகள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டாலும் வருவதாகவும், தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் பல்கலைக்கழக முடிவுகள் தெரிவிக்கின்றன. ஃபைசர் தடுப்பூசி இரண்டாவது டீசல் ஏற்படும் பக்கவிளைவுகள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸிலேயே ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை 3.2 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருதய பகுதியில் வலி, மூச்சு விடுதலில் சிரமம் உள்ளிட்ட பக்கவிளைவுகளும் பொதுவாக காணப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பக்கவிளைவுகள் கண்டறியப்பட்ட பெரும்பாலானோருக்கு ஏழிலிருந்து 15 நாட்களுக்குள் குணம் அடைவதாகவும் முறையான உணவு பழக்கம் மற்றும் ஓய்வு போதுமானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலிநிவாரணி மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Link Source: https://ab.co/3hCHgFU