ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்து வரும் நிலையில் அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. அதன் ஒரு பகுதியாக முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் செவிலியர், பணியாளர்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாகவும் இதனால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களுக்கான ஊதியத்தை அதிகரிப்பது, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகளை கூடுதலாக வழங்குவது, முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனைத்து மாகாண அரசுகளும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சில்லரை வர்த்தகம் மற்றும் துரித உணவங்களில் பணியாற்றும் நபர்களின் ஊதியத்தை விட குறைவான ஊதியத்தை முதியோர் பராமரிப்பு பணியாளர்கள் பெற்று வருவதாகவும், இந்த நிலை மாற வேண்டும் என்றும் கூடுதல் ஊதியத்திற்காக அனைவரும் வேறு வேலைக்கு சென்றால் முதியோர்களின் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதியோர் இல்லங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பலர் வேலையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முழு நேரம் பணியாற்றும் தொடக்க நிலை பணியாளர்களுக்கு ஊதிய உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ளார். அதன்படி குழந்தைகள் பராமரிப்பு பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு 20.80 டாலரும், முதியோர் பராமரிப்பு பணிக்கு 21.62 டாலர், தூய்மைப் பணிக்கு 21.71 டாலர், மாற்றுத்திறனாளி பராமரிப்புக்கு 22.11 டாலரும், துரித உணவங்களில் பணியாற்றும் பணியாளருக்கு 22.33 டாலர், சில்லரைவர்த்தக கடை பணியாளருக்கு 22.33 டாலரும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த ஊதிய விகிதம் முதியோர் பராமரிப்பு பணியாளர்களுக்கு போதுமானதாக இல்லை என்றும், வாரம் ஒன்றிற்கு அவர்கள் பணியாற்றும் நேரத்தின் அடிப்படையில் 400 டாலர் வரையே ஊதியம் என்பது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் பணியாளர்களுக்கான தேசிய அமைப்பின் தலைவர் Gerard Hayes கூறியுள்ளார். குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு ஊதியத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் Gerard Hayes அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் பணியாளர்களுக்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாஸ்க், பிபிஇ கிட், சானிடைசர், தடுப்பூசி உள்ளிட்டவை முன்னுரிமை அளித்து வழங்கப்பட வேண்டும் என்றும், பல்வேறு முதியோர் இல்லங்களில் இன்றும் போடப்படாமல் தடுப்பூசி தவணைகளை விரைந்து செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Link Source: https://bit.ly/3GyC7rI