ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவச தேவைகளின்றி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தரைதளத்தில் மழை வெள்ளம் ஓடுவதால், பொதுமக்கள் பலர் வீட்டின் மேற்புறங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவ்வாறு வுட்பர்ன் என்கிற பகுதியில் மாற்றுத்திறனாளியான பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் மகனுடன் மார்க் ஓ டூலே என்பவர், மழை வெள்ளம் காரணமாக வீட்டின் மேற்புறத்தில் தஞ்சமடைந்துள்ளார். அந்த வழியாக ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மார்க் ஓ டூலே இரண்டு பேருடன் வீட்டு மேற்கூரையில் இருப்பதை கவனித்துள்ளனர். உடனடியாக கயிறை இறக்கி மூவரையும் வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு படலம் சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சம்பவம் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் பரவலானது. இதையடுத்து ஆஸ்திரேலியப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட மார்க் ஓ டூலே, அவருடைய மகன் மற்றும் மாற்றுத்திறனாளி நபர் அனைவரும் நலமுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது.
Link Source: https://ab.co/36WYj2z