உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் ஏழாவது நாளை கடந்துள்ள நிலையில் தலை நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களை இலக்காக வைத்து ரஷ்யப் படைகள் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளன உக்ரைனின் பல்வேறு முக்கிய கண்காணிப்பு மற்றும் ராணுவ செயல்பாட்டு தளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் போரை நிறுத்துவதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பெலாரஸில் நடைபெற்ற இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் இது ஏமாற்றம் அளிப்பதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இருநாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்பட்டுவரும் இழப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னரும் ரஷ்யாவிடம் இருந்து தாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்காதது மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ள அதிபரின் ஆலோசகர் Mykhailo Podolyak கூறியுள்ளார்.
போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தயாராக இருந்தாலும் தங்களது இலக்கு மக்களை கொல்வது அல்ல என்றும், உக்ரைனின் ராணுவ கட்டமைப்பை முழுவதுமாக அழிப்பதே என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergey Lavrov
கூறியுள்ளார்.
பெலாரஸ் – போலந்து எல்லைப் பகுதியில் நடைபெறும் இரண்டாவது சுற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றன. அதே நேரத்தில் போர் நிறுத்தம், படைகளை திரும்பப் பெறுதல் மற்றும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக மீட்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடையே தேவைப்படும் பட்சத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேருக்கு நேர் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனில் மக்கள் வெளியேறுவதற்கு ரஷ்ய ராணுவமே உதவி புரிந்து வரும் நிலையில் அதை அங்குள்ள சில குழுக்கள் தடுத்து வருவதாகவும், மக்கள் உயிரிழப்பதற்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாத குழுக்களே காரணம் என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகவும் இது மேலும் உக்ரைனுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்றும் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்நாட்டு தேசியவாதிகளால் உக்ரைன் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும், ரஷ்ய ராணுவம் ‘நியோ – நாஜி’ மீதான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது என்ற கூற்றை தான் மீண்டும் உறுதிப்படுத்துவதாக புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவ படையின் சிறப்பு ஆபரேஷன் படிப்படியாக தன்னுடைய நிலையை எட்டி வருவதாகவும் அது விரைவில் வெற்றிகரமாக முடியும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுவரை 250 உக்ரைனியர்கள் உயிர் இழந்திருப்பதாகவும், ஆயிரம் பேர் வரை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் வெளியேற காத்திருந்த நிலையில் அங்கிருந்த மக்கள் உயிரிழந்ததாக ஐநா தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3KhxAvS