உக்ரைனின் பல்வேறு நகரங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா கிவிவ் மற்றும் லிவிவ் நகரங்களில் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது. குறிப்பாக லிவிவ் விமான நிலையம் மற்றும் விமான பழுதுபார்க்கும் தளம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அந்த பகுதி முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
நகரின் மையப்பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் விமானம் பழுது பார்க்கும் இடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் வெளியேறுவதற்கான வழிகளை குறிவைத்து தாக்கும் வகையில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் மோசமானது என்று மாகாண ஆளுநர் Maksym Kozytskyy தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னர் பல மணி நேரங்கள் அந்த பகுதியில் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்ததாகவும், தாக்குதலின்போது அருகில் உள்ள கட்டிடங்கள் தொடங்கியதை நேரில் பார்த்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கருங்கடல் பகுதியில் இருந்து அதிகாலை நேரத்திலேயே மூன்று ஏவுகணைகள் மேற்கு லிவிவ் நகரப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், உக்ரைன் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 3 ஏவுகணைகள் தடுத்து நிறுத்த பட்டதாகவும் லிவிவ் நகர மேயர் Andriy Sadoviy கூறியுள்ளார்.
கிவிவ் பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து ரஷ்யப் படைகள் பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் மனிதாபிமான வழித்தடங்கள் வழியாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வருவதாகவும் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் பதுங்கி இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளிலும் கடும் தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாகவும் ரஷ்ய ராணுவம் மீது பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கடுமையான போர் குற்றத்தை ரஷ்யா மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ரஷ்யா நடத்திய தாக்குதலில் தலைநகரில் 4 குழந்தைகள் உட்பட 222 பேர் கொல்லப்பட்டதாகவும், 889 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் மாநரக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரியுபோல் நகரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து திரையரங்கு ஒன்றில் மக்கள் அதிக அளவில் பதுங்கி இருந்த நிலையில் அந்த பகுதியில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை அரங்கேற்றியது. இதில் பலர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே திரையரங்கில் இருந்து வெளியேறிய நிலையில் இன்னும் எத்தனை பேர் அதில் சிக்கி இருக்கிறார்கள் என்பது தொடர்பான நடவடிக்கைகளை மீட்பு படையினர் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மனிதாபிமான வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது மக்கள் வெளியேறும் நேரங்களில் இதுபோன்ற தாக்குதல்களை அரங்கேற்றி வருவதற்கு அதிபர் செலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் போர்க்குற்றங்களை அரங்கேற்றி வரும் ரஷ்ய ராணுவம் உள்நோக்கத்தோடு தாக்குதலை நடத்தி வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் Antony Blinken கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3qiqHTB