உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கையகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து முன்னேறி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் மிக முக்கிய அணுமின் நிலையமான Zaporizhzhia-வை கைப்பற்றுவதில் உக்ரைன் ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் நடத்தியது.
இந்நிலையில் அணுமின் நிலையத்தின் நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. அதேநேரம் Zaporizhzhia அணுமின் நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. அணுமின் நிலையத்தின் மீது ரஷ்ய ராணுவம் சரமாரியாக குண்டு மழை பொழிந்த தாகவும், கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் பட்சத்தில் இது உலக நாடுகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் உள்ளூர் மேயர் Dmytro Orlov தெரிவித்துள்ளார்.
ரியாக்டர் கட்டிடங்களின் ஒரு பகுதியில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதே நேரத்தில் அணு உலை தற்போது சீராக இயங்கி வருவதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அணு உலை பகுதியில் தாக்குதல் நடத்துவது மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும், அது ஐரோப்பாவிற்கான கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உக்ரைனுக்கான மின் உற்பத்தியில் குறிப்பிடும் அளவு பங்கு வகித்து வருகிறது Zaporizhzhia
அணு உலை. ரஷ்ய வடிவிலான 6 அணுஉலைகளை கொண்டது இந்த அணுமின் நிலையம். செர்னோபில் அணு உலை விபத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக உக்ரைனில் இந்த அணு உலை அமைக்கப்பட்டது.
அணு உலை அமைந்துள்ள நகரம் உள்ளிட்ட உக்ரைனின் பல்வேறு முக்கிய பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் கதிர்வீச்சு அபாயம் எதுவும் இதுவரை இல்லை என்றும், அதே நேரம் விபத்து ஏற்படும் பட்சத்தில் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ரஷ்ய ராணுவம் Zaporizhzhia அணு உலை மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அது செர்னோபில் விபத்தை விட பத்து மடங்கு அதிகமானதாக இருக்கும் என்றும் எனவே ரஷ்யா உடனடியாக தனது படைகளை திரும்பப் பெற்று போரை நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba கேட்டுக்கொண்டுள்ளார். அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு விபத்து ஏற்படும் பட்சத்தில் அதுவே அனைவருக்குமான முடிவு என்றும் அது ஐரோப்பாவிற்கான முடிவு என்றும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அணு உலை அமைந்துள்ள பகுதியில் இரு நாடுகளும் சண்டையிட்டுக் கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அது மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் ஐநா அணுஉலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/35U87K6