விக்டோரியா மாகாணத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. விரைவில் கோவிட் பரவலின் உச்சத்தை எட்டவுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன் தலைமை சுகாதார அதிகாரி எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து வருகிறது.
மாகாணத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அதிக நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர நிலையான Code Brown பிரகடனப்படுத்தப்படும் என்றும் தற்காலிக சுகாதார அமைச்சர் James Merlino கூறியுள்ளார்.
இயற்கை பேரிடர், அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழும் போது அமல்படுத்தப்படும் அவசர நிலை, தற்போது மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதை அடுத்து பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாநகர மருத்துவமனைகள் மற்றும் மகாகணத்தின் முக்கிய 6 மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் உடனடியாக Code Brown அவசர நிலை அமலுக்கு வருகிறது. அந்தந்த பகுதி மருத்துவமனைகளுக்கு ஏற்ப விதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் தற்காலிக சுகாதாரத்துறை அமைச்சர் James Merlino தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மாகாணத்தின் மருத்துவக் கட்டமைப்பு தற்போது பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் , இந்த நிலை மாறுவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருவதால் பணியாளர் பற்றாக்குறை காரணமாக மேலும் நெருக்கடி நிலவுகிறது.
இந்நிலையில், மருத்துவமனைகளில் பணியாற்றும் ஆயிரம் பேருக்கு அவர்கள் எடுக்க வேண்டிய விடுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் பிப்ரவரி மாதத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3qEpbM6