ஆஸ்திரேலியாவின் சுகாதாரம் மற்றும் பொதுநலன் சங்கம் இரண்டாண்டுக்கு ஒருமுறை தேசிய சுகாதாரம் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதற்காக ஆஸ்திரேலிய மக்களின் உடல்நலன், மனநலன், வாழும் திறன் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நடப்பாண்டில் வெளியாகியுள்ள இவ்வாய்வு முடிவுகள் ஆஸ்திரேலியா முழுக்க கவனமீர்த்துள்ளது. இதுதொடர்பான செய்திகள் பின்வருமாறு.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நாள்பட்ட உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுடன் வாழ்வது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இருதய நோய் பிரச்சனைகளுடன் மற்றும் மனச்சோர்வினால் ஏற்படும் பாதிப்புகள் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் வசிக்கும் இளைஞர்களில் மூவரில் ஒருவருக்கு அதிக எடை அல்லது உடல் பருமன் பிரச்னைகள் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 9 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 6 பெண்களில் ஒரு பெண் மற்றும் 16 ஆண்களில் 1 ஆண் உள்ளிட்டோர் தங்களுடைய காதல் துணை / கணவன் / மனைவியால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.
குறைந்த சமூகப் பொருளாதாரப் பகுதிகளில் உள்ளவர்களில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சராசரி அளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. வெளிநாட்டில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில், கடந்த 2020-ம் ஆண்டு கூடுதலாக 2.5 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கும் கொரோனா பரவல் முக்கிய காரணமாக இருப்பதாக ஆஸ்திரேலியாவின் சுகாதாரம் மற்றும் பொதுநலன் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.