தற்போதைக்கு ஆஸ்திரேலியா முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். விரைவில் அங்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, அதன் காரணமாக மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் தேர்தல் ஆணையம், தொலைப்பேசி வாயிலாக வாக்குகளை பதிவு செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த விரும்புவோர் ஆஸ்திரேலியாவின் தேர்தல் ஆணைய வலைதளத்துக்கு சென்று உரிய பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து தங்களுடைய கொரோனா பரிசோதனை முடிவு, அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் உங்களுடைய வயதை உறுதி செய்யும் ஆவணம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
அதை தொடர்ந்து நீங்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர் என்பதை உறுதி செய்து ஆணையத்தின் சார்பில் குறுந்தகவல் அனுப்பப்படும். இதன்மூலம் நீங்கள் தேர்தல் நாளன்று வீட்டில் இருந்தவாரே வாக்களிக்க முடியும். தகுதியுடைய நபர்கள் பதிவு செய்வதற்கு மே 18-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.