மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பரவலாக குறைந்து வரும் நிலையில், பிப்ரவரி 5ம் தேதி எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக ப்ரிமியர் Mark McGowan அறிவித்தார். மேலும் அந்த முடிவில் உறுதியாக உள்ளதாகவும், கட்டுப்பாடுகளை தளர்த்தி எல்லைகளை திறக்கும் பட்சத்தில் தான் வேலை, வர்த்தகம், பொருளாதாரம் மேம்படும் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் வரும் வாரங்களில் ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரசின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்று Mark McGowan குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் எல்லைகளை திறக்கும் விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. மாகாண அரசு இந்த விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், தொற்றுப்பரவலின் தாக்கத்தை மதிப்பிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் வரும் நாட்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வகையில் எல்லை திறப்பு நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒமைக்ரான் தொற்று மாதிரியின் முடிவு இன்னும் புலப்படாத நிலையில் எல்லைகள் திறப்பு நடவடிக்கை உகந்தது அல்ல என்று ஆஸ்திரேலியா மருத்துவ கழகம் எச்சரித்துள்ளது. மேலும் ஒரு பேரழிவை நோக்கி நாம் சென்றுவிடக் கூடாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் நாளொன்றுக்கு ஒரு லட்சம் வரை தொற்று பாதிப்பு பதிவாகி வரும் நிலையில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக நடவடிக்கைகளை மாகாண அரசுகள் முதலில் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
பூர்வ குடி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும், பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்க உள்ள நிலையில் எல்லைகள் திறக்கப்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் Barbara Nattabi கூறியுள்ளார். இரண்டு டோஸ்* தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகியவை 90 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய பின்னரே எல்லைகளை திறப்பது தொடர்பான முடிவை மாகாண அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் Barbara Nattabi தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மாகாணத்தில் நிலவும் வேலையின்மை, சுற்றுலா பாதிப்பு, வர்த்தகம், பொருளாதார தேக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு முழுவதும் தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பின்னடைவை சரி செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்பதால் உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3FkqbJk