இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன் தகுதி உள்ள ஆஸ்திரேலிய குடிமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொண்டால் இந்தாண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியர்கள் தனிமைப்படுத்துதலின்றி
வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி திட்டத்தின் மூலம் கொரோனாவை முழுமையாக அழிக்க முடியாது என்றும், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவில் தளர்வுகள் நீக்கப்பட்டால் ஒருநாளில் 1000 பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்த பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்படுவதில் அவசரம் காட்டமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வருவதாகவும் சுமார் 30 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் எல்லைகளை திறந்து ஆஸ்திரேலிய மக்களின் பாதுகாப்பை சீர்குலைக்க முடியாது என்றும் அனைத்து தளர்வுகளும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சிறு சிறு தளர்வுகள் கொடுப்பதற்கு முகாந்திரம் உள்ளதாகவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அத்தியாவசிய பணிகளுக்கு வெளிநாடு செல்பவர்கள் விடுதிகளில் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதற்கு உரிய வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்..
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி உறுப்பினர் மார்க பட்லர், மாற்று முறைகளில் தனிமை படுத்திக்கொள்வது குறித்து முடிவெடுக்கும் முன்பு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மக்களிடையே தடுப்பூசி மீது நம்பகத்தன்மையை அதிகரிக்க பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.