கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சுமார் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை சுமார் 1,20,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை குறித்து நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, கொரோனா குறித்த புரிதல் அதிகமாகவே உள்ளதாகவும், அதனை கட்டுப்படடுத்த அரசு பல்வேறு வழிமுறைகளை கையாள்வதாகவும் குறிப்பிட்டார். அதே நேரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு இருந்ததைவிட, தடுப்பூசி உள்ளிட்ட நோய் தடுப்பு கட்டமைப்பு வலுவாக உள்ளதாக தெரிவித்த பிரதமர், குறுகிய காலத்தில் கொரோனாவுக்கு எதிரான சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளர். தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யவும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கவும் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுவது தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் மாநிலங்களிலேயே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவதுடன், உதவி தேவைப்படுவோருக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். முழு ஊரடங்கை அமல்படுத்துவதை மாநிலங்கள் கடைசிவாய்ப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிய பிரதமர், நாட்டின் குடிமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிமுறைகளை பினபற்றினால் அதற்கான அவசியம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.