நடந்து முடிந்த ஆஸ்திரேலியப் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவரான ஆண்டனி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அந்த கையுடன் ஜப்பானில் நடைபெற்று வரும் குவாட் உச்சிமாநாட்டுக்கு அவர் சென்றுவிட்டார்.
டோக்கியாவில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்க, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்றுள்ளன. அந்நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலர் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசி வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு பசிஃபிக் பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டது. இதில் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. அதையடுத்து தொடங்கப்பட்டது தான் குவாட் அமைப்பு. இதனுடைய முதல் சந்திப்புக் கூட்டம் 2007-ம் ஆண்டு நடந்தது.
கொரோனா தாக்கம் காரணமாக இரண்டாண்டுகள் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. கடந்தாண்டு ஆஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் ஸ்காட் மோரீசன் பங்கேற்றார். தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டனி அல்பானீஸ் ஆஸ்திரேலியா சார்பாக குவாட் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போது பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், ஆஸ்திரேலியாவில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவற்றை முதன்மையாக வைத்து பேசினார் ஆண்டனி அல்பானீஸ். அதனால் உலக நாடுகளை பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் இணைத்துகொள்ள அவர் விரும்புகிறார். அதில் முதல் தொடக்கமாக குவாட் மாநாடு அமைந்துள்ளது.