குற்றவியல் பதிவுகள் கொண்ட ஆயிரக்கணக்கான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியா வகுத்துள்ள கொள்கைக்கு நியூசிலாந்து அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து மக்கள் கண்ணியத்துடன் வாழும் போக்கை இந்த கொள்கை முறியடிப்பதாக பலரும் கூறி வருகின்றனர். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
புதிய பிரதமராக ஆண்டனி அல்பானிஸ் பதிவேற்றதை தொடர்ந்து, இந்த கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறினார். ஆனால் இதுதொடர்பாக எதிர் கருத்து கொண்டவர்களிடம் விவாதிக்க தயார் என்று அவர் கூறினார். இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். குற்றவியல் கொள்கை முடிவு தொடர்பாக பிரதமர் ஆண்டனி அல்பானிஸிடம் அவர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து ஊடகங்களிடம் பேசிய அவர், குற்றவியல் கொள்கை குறித்து ஆஸ்திரேலியா விவாதித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கொள்கை முடிவுகளில் மாற்றம் செய்ய நியூசிலாந்து வலியுறத்தவில்லை. ஆனால் சில நியாயங்களை மட்டுமே கருத்தில் கொள்ள கேட்டுக்கொண்டோம் என்று கூறினார்
இதையடுத்து ஆஸ்திரேலியா வகுத்துள்ள நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவது தொடர்பான கொள்கையில், பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் மென்மையான போக்கை பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரியவந்துள்ளது.