மேற்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் சமூக பரவல் மூலமாக 213 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேலும் பல்வேறு சுகாதார மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ப்ரீமியர் Mark McGowan உத்தரவிட்டுள்ளார்.
5 ஆயிரத்து 800 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் 213 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் 11 பேர் உள்நாட்டில் பயணம் செய்த பயணிகள் என்றும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது 2 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவரும் இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான எண்ணிக்கை மற்றும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ப்ரீமியர் Mark McGowan அறிவித்துள்ளார்.
மிகவும் தொலைதூர பகுதியான Mantamaru உள்ளிட்ட இடங்களில் சமூகப்பரவல் அதிகரித்து வருவதாகவும், தொற்று பரவல் மையங்களாக சில இடங்கள் உருவாகி வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Gibson மாவட்டத்தின் Ngaanyatjarra Lands பகுதியில் இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மாகாணத்தின் பின் எல்லையாக கருதப்படும் தெற்கு ஆஸ்திரேலியாவின் வழியாக அந்த பகுதிக்குள் வந்தவர்கள் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் Northern Territory மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா வழியாக மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கான கட்டுப்பாடுகளும் அதிகரிக்கபடுவதாக ப்ரீமியர் Mark McGowan தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மார்ச் 3ஆம் தேதி தனது எல்லைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய தெரிவித்துள்ள நிலையில் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாக Qantas விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3v8Plt4