உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் தொற்று பரவல் ஒரு புறம் இருந்தாலும், டிசம்பர் இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட்டத்தை எதிர்நோக்கி பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் டெல்டா வகை வைரஸ் பரலைத்தொடர்ந்து குயின்ஸ்லாந்து, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா போன்ற மாகாணங்கள் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 70% கடந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தங்கள் மாகாணத்துக்குள் நுழையும் வெளி மாநிலத்தவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால், அவர்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று குயின்ஸ்லாந்து மாகாணம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் 12 வயதை கடந்தவர்களில் சுமார 60% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இதனை 80% அதிகரிக்க மேற்கு ஆஸ்திரேலிய மாகாண அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த இலக்கை கிறிஸ்துமஸுக்கு முன்பாக எட்ட வாய்ப்பு குறைந்துக்கொண்டே வருவதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் பிரெவென் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய மாகாண பிரிமீயர் McGowan , எல்லை தளர்வுகளை கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார். தளர்வுகளை அறிவித்துவிட்டு, மாகாணத்திற்குள், கட்டாய முகக்கவசம், எண்ணிக்கையில் கட்டுப்பாடு, மக்கள் கூட கட்டுப்பாடு என்று கிறிஸ்துமஸ் காலத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மாகாண மக்களின் பண்டிகை கொண்டாட்டத்தையே சீர்குலைப்பதாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை கருத்தில் கொண்டு இந்தாண்டு இறுதி வரை எல்லைகளில் தளர்வுகளை கொடுப்பது கடினம், என்றும் மக்களை பாதுகாப்பதும் அரசின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார். மாகாணம் பாதுகாப்பாக உணரும் தருணத்தில் உரிய தளர்வுகளை வழங்க அரசு தயாராக உள்ளதாகவும், அதை நோக்கிய பயணத்தில் தடைகளை அனுமதிக்க முடியாது என்றும் பிரிமீயர் McGowan தெளிவுபடுத்தியுள்ளார்.
Link Source: https://bit.ly/3G5MdRJ