ஆஸ்திரேலியாவில் தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் Vote Compass என்னும் கருத்துக்கணிப்பு ஒன்றை ஏபிசி நிறுவனம் நடத்தியது.
இன்றைய சூழலில் ஆஸ்திரேலியாவில் ஊழல் எந்த அளவுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 49 சதவீதம் பேர் அதுதான் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்று பதிலளித்துள்ளனர்.
ஏதோ ஒரு வகையில் அதுவும் காரணமாக இருப்பதாக 36 சதவீதம் பேரும், அந்த அளவுக்கு ஒன்றும் பிரச்சனையாக இல்லை என 10 சதவீதம் பேரும், அது பிரச்சனையே இல்லை என ஒரு சதவீதம் பேரும் கருத்து கணிப்பில் பதிலளித்துள்ளனர்.
இதே போன்ற கேள்விகள் கட்சி அடிப்படையிலும் பிரதமர் வேட்பாளர் அடிப்படையிலும் எழுப்பப்பட்டுள்ளது. லிபரல் கட்சி, லிபரல் தேசிய கூட்டணி மற்றும் கிரீன் கட்சி தொடர்பாக உள்ள பிரச்சனைகள் எந்த அளவுக்கு தேர்தலில் வாக்குகளாக எதிரொலிக்கும் என்பது குறித்து வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் Antony Albany’s இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கட்சி அடிப்படையிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் எந்தவிதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் மக்களின் மனங்களை பிரதிபலிப்பதாகவும் ஏபிசி நிறுவனத்தின் தலைமை பகுப்பாய்வாளர் Antony Green கூறியுள்ளார்.
அதேநேரத்தில் தற்போது மக்கள் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் ஒரு சில தவறுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு இருப்பதாகவும், அதற்கான உரிய கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிட் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மருத்துவ கட்டமைப்பில் தொய்வு விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் பிரதான பேசு பொருளாக மாறியுள்ளது.
மத்திய கூட்டாட்சி அரசின் நடவடிக்கைகள் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் பட்சத்தில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும் என்றும், அதற்கான சூழலை அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவின் அடிப்படையில் நிபுணர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மற்றொரு சுற்று கருத்துக்கணிப்பில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் மீதான வரியை மத்திய அரசாங்கம் முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொருளாதார சம நிலையை ஏற்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.