ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வருகைக்கு பிறகு, ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட, அவர்களின் உரிமைக்காக போராடியவர்களும் ஆப்கன் நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர் .
அவர்களின் ஒருவரான அர்யானா சையத், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்காகவும், தாலிபான்களுக்கெதிராகவும் குரலெழுப்பியவர்.
காபூல் நகரை தாலிபான்கள் கைப்பற்றியதும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியதாகவும், தன் வீட்டை தாலிபான்கள் சூறையாடியதுடன் தன்னை விமான நிலையம் வரை துரத்திவந்த அந்த நிமிடங்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார். 2014ல் இருந்தே தாலிபான்கள் தன்னை கொல்ல முயன்றதாகவும், அதற்காக அவர்கள் மனித வெடிகுண்டை அனுப்பியதாகவும் அர்யானா தெரிவிக்கிறார்.
தாலிபான்கள் காபுல் நகரத்தை கைப்பற்றியதாக முதலில் செய்தி வெளியான நிலையில் தான் அதனை நம்பவில்லை என்று தெரிவிக்கும் அர்யானா, பிறகு அனைவரும் வெளியேறியதை கண்டு தன்னுடைய கைப்பை மற்றும் முக்கிய ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய கணவருடன் விமான நிலையம் நோக்கிய் சென்றதாக தெரிவிக்கிறார்.
விமான நிலையம் சென்றதும் அங்கு கண்ட காட்சிகளை மறக்க முடியாது என்று தெரிவிக்கும் அர்யானா, தன்னைப்போல நூற்றுக்கணக்கான மக்கள் விமானங்களை ஏறுவதற்கு முயன்றதாகவும், பல தாய்மார்கள், தன்னுடைய குழந்தைகளையாவும் விமானத்தில் ஏற்றிச்செல்லும் படி மன்றாடியதை பார்க்க முடிந்ததாகவும் கூறுகிறார். பல பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி , மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்ததாகவும், சிலர் பச்சிளம் குழந்தைகளை மேலே தூக்கியவாறு உதவி கோரியதாகவும் தெரிவிக்கிறார்.
தனக்கு இரண்டு விமானத்தில் இடம் கிடைக்காமல், மூன்றாவது விமானத்தில் ஏறுவதற்கு இடம் கிடைத்ததாகவும், தன்னுடைய உயிருக்கு தாலிபான்களால் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்தே அமெரிக்க வீரர்கள் இடம் கொடுத்ததாகவும் அர்யானா விளக்குகிறார்.
முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிந்ததால் தன்னை தாலிபான்களால் கண்டறியமுடியவில்லை என்று தெரிவிக்கும், அவர் தன்னை நோக்கி தாலிபான்கள் வரும் தருணங்களில், உடல் சில்லிட்டு போனதாகவும் தெரிவிக்கிறார்.
ஒரு தருணத்தில் தன்னுடைய செல்போனில் இருந்த சிம் கார்டை நீக்கியதாகவும் தெரிவிக்கிறார். அதற்கு காரணம் கடந்த காலங்களில் பெண் உரிமை பேசிய பெண்களை தாலிபான்கள் உயிருடன் எரித்ததாகவும், அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் என்று அவர்கள் கருதுவதாகவும் அர்யானா கூறுகிறார். தனக்கும் அந்த நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவர்கள் கையில் உயிருடன் கிடைப்பதை விட, இறந்து விடுவதே மேல் என்று நினைத்ததாகவும் அவர் அந்த பகீர் நிமிடங்களை பகிர்ந்துக்கொள்கிறார்.
இறுதியாக விமானத்தில் ஏறிய நூற்றுக்கணக்கானவர்களின் முகங்களில் சோகமே குடிக்கொண்டிருந்ததாகவும், யாருடைய முகத்திலும் சிரிப்பை பார்க்க முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர், அதற்கு காரணம் ஒவ்வொருவரும் தங்களுடைய மகனையோ, மகளையோ, தாயையோ தந்தையையோ, ஆப்கானில் விட்டு விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கிறார்.
இது தங்களில் பாதியை நிச்சயமில்லாத ஒரு இடத்தில் விட்டு வெளியேறுவதற்கு ஒப்பானது என்று தெரிவிக்கிறார். ஆப்கானில் வாழ்வது சுதந்திரம் இல்லாத ஒரு கூண்டுக்குள் வாழ்வது போல் என்று கூறும் அர்யானா, நிச்சயம் ஒரு நாள் விடிவு கிடைக்கும் என்றும், இருள் நிரந்திரம் இல்லை என்றும் நம்பிக்கையுடன் பேசுகிறார்.
Link Source: https://ab.co/3zTLSy9