வடக்கு பிராந்தியத்தில், டார்வின் ஹோவர்ட் கோவிட் தனிமை முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடுகளில் இருந்து மீட்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுபவர்கள், நோய் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அண்மையில் தென் ஆப்ரிக்காவில் இருந்து மீட்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா அழைத்து வரப்பட்டவர்களும் இந்த முகாமில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தென்னாப்ரிக்காவில் இருந்து வந்தவர்களில் 30 வயது நபருக்கு ஒமிக்ரான் வகை திரிபு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவரும் டார்வின் தனிமை முகாமிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இம்முகாமில் இருந்து அதிகாலை 4.40 மணியளவில் 3 பேர் தடுப்புகளை கடந்து தப்பிச்சென்றுள்ளனர். அம்மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டுள்ள வடக்கு பிராந்திய காவல்துறையினர்,தப்பிச்சென்ற மூவரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டீவ் முடிவு வந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ச் இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை வடக்கு பிராந்திய காவல்துறை ஆணையர் ஜேமீ ச்சால்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிப்பார் என்று கருதப்படுகிறது. அதே நேரம் தப்பிச் சென்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களா என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை.
வடக்கு பிராந்தியத்தில் கேத்தரீன் பகுதியில் ஏற்பட்ட தொற்று பரவலே மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் மட்டும் 58 பேருக்கு தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்திய காவல்துறையின் முகநூல் பதிவில் , ஹோவர்ட் ஸ்பிரிங் தனிமை முகாம் உள்ள வழித்தடத்தில் பயணம் செய்யும் ஓட்டுநர்கள், காவல்துறையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் 27 வயதான நபர் இதே முகாமில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், ஒரு வாகனத்தில் இருந்து அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Link Source: https://ab.co/3EdInov