மேற்கு மெல்போர்னின் DEER PARK பகுதியை சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவர் ஆன்லைன் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 2018ம் ஆண்டு முதல் 2021 வரை 109 பேரிடம் மோசடி செய்து 2 லட்சத்து 95 ஆயிரத்து 705 டாலர் வரை நிதி மோசடி நடைபெற்று இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் சந்தையில் நாய்க்குட்டிகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து அதன் மூலம் வரும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை மாற்றுவதற்காக வங்கி விவரங்களை பெற்று அதன் மூலம் மோசடியை அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வரி அலுவலகம் மற்றும் செல்போன் சேவை நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவது போல வாடிக்கையாளர்களிடம் பேசி மோசடி செய்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில் மேலும் பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் வாயிலாக நிதி, சொத்து உள்ளிட்ட மோசடிகளை நடத்தி இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து விலங்குகளை நேரில் பார்த்து விலை கொடுத்து வாங்கும் வரை வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. செல்போன் சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய அறிவுறுத்தினால் அதை யாரும் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் விக்டோரியா காவல்துறையின் இணையதளத்தில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என்றும், 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணில் புகார்களை அளிக்கலாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆன்லைன் விளம்பரங்களை கட்டுப்படுத்துவது மற்றும் மோசடிகளை கண்டறிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதிலும் கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.