ஆஸ்திரேலியாவில் விவசாய பண்ணைகளில் பணியாற்றுவதற்காக ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு பசிபிக் தீவு நாடுகளில் இருந்து பணியாளர்களை அழைத்து வருவதற்கான வழிகளை கண்டறியும் திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்கும் சூழல் ஏற்படுகிறது இதனை போக்கும் வகையில் பசிபிக் தீவு நாடுகளில் இருந்து விவசாய தொழிலாளர்களை Agriculture Visa அடிப்படையில் அனுமதிப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
27 ஆயிரம் பசுபிக் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள அரசு, தற்போது உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் அத்தனை பேரையும் தனிமைப்படுத்துதலில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதற்கான மாற்று திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக மாகாண அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச வளர்ச்சி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் Zed Seselja கூறியுள்ளார். மேலும் பயிர்கள் அனைத்தும் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விடுதிகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை பண்ணையிலேயே தனிமைப் படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யவும் மாகாண அரசுகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான மாகாணங்களில் ஆலைகள் மூடப்பட்டு பயண கட்டுப்பாடு அமலில் இருப்பதால் தொழிலாளர்களைக் கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாகவும் அதனை களையும் வகையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் புதிதாக தொற்று பரவ உருவாகாமல் தடுக்கும் வகையிலும், தொழிலாளர்கள் மூலமாக தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையிலும், சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை அக்ரிகல்ச்சர் விசா அடிப்படையில் அழைத்து வரும் போது அவர்களுக்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்றும், தொற்று நோய் பரவல் கட்டுப்பாடுகளை அவர்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் செனட்டர் தெரிவித்துள்ளார்.
Link Source: https://bit.ly/395F84z