இயற்கை சீற்றத்தால் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தில் ஓடும் ரிச்மாண்டு மற்றும் வில்சன் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வீடுகளை இழந்த பலரும் சாலைகளிலும், திறந்தவெளிகளிலும் கூடாரங்கள் அமைத்து தஞ்சம் புகுந்தனர். வேறு சிலர் கார் உள்ளிட்ட வாகனங்களில் வசிக்க தொடங்கினர். உணவு, தண்ணீர், மாற்றுத் துணி உள்ளிட்ட அத்தியாவச பொருட்களுடன் அவர்கள் பல மாதங்களாக வாழ்ந்து வருகின்றனர். தினசரி தேவைகள் மற்றும் அன்றாட செயல்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் தகவல் வெளியிட்ட நியூ சவுத் வேல்ஸ் அரசு, கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேர் வீடு அமைத்து தரக்கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 2,000 பேருக்கு வீடுகளை கட்டித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால் தற்போது வரை வெறும் 25 பேருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள விபரம் தெரியவந்துள்ளது.
மக்களின் துயரநிலையை காண சகிக்காத சிலர் ஒரு அமைப்பை உருவாக்கி, நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசுடன் கைக்கோர்த்துள்ளனர். அவர்களுடைய முயற்சியாக லிஸ்மோர் என்கிற வெள்ளம் பாதித்த பகுதியில் காரவான்கள், கப்பலுக்கான கொள்கலன்கள் மற்றும் மரச்சட்டங்களை வைத்து வீடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக ஏற்பாடாக இவை தயாராகி வருகின்றன. கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் 12 மாதங்கள் கட்டணமின்றி தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தற்காலிக குடியிருப்பில் தங்கவைக்க அரசு முயற்சி எடுக்கும் என்று உறுதி கூறியுள்ளது. மேலும், அவர்களுடைய பாதிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக தயாராகும் வரை அரசு வழங்கும் குடியிருப்பில் பாதுகாப்புடன் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.