பசிபிக் தீவு நாடுகளில் பேபூவா நியூ கினியாவுக்கு தனி செல்வாக்கு உள்ளது. கடந்த சில நாட்களுக்காக பொதுத் தேர்தலை முன்னிட்டு அந்நாடு முழுவதும் பரபரப்பு காணப்பட்டு வந்தது . எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்ட மேடைகள், அணிவகுப்புகள், மக்கள் குரல்கள் என தொடர் நிகழ்வுகள் அரங்கேறி வந்தன.
தற்போது அங்கு வாக்குப்பதிவு துவங்கியுள்ளதை அடுத்து, பசிபிக் தீவுகளின் மொத்த நாடுகளும் பேபூவா நியூ கினியாவை உற்றுநோக்கி வருகின்றன. மொத்தம் 118 மக்களவை கொண்ட அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு 3625 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 167 பேர் மட்டுமே பெண்கள். மொத்த வேட்பாளர்களுக்கான எண்ணிக்கையில் இது 5 சதவீதம் மட்டுமே. உலகளவிலுள்ள நான்கு நாடுகளில் மட்டுமே இன்னும் பெண்கள் மக்களவை பதவிக்கு வரமால் உள்ளனர். அதில் பேபூவா நியூ கினியாவும் ஒன்று. ஆஸ்திரேலியாவைப் போன்று, இரண்டு கட்சிகள் தான் பெரிய கட்சி, தேர்தல் என்று வந்துவிட்டாலே அவை இரண்டுக்கும் மட்டுமே களத்தில் வெற்றி, தோல்வி என்கிற நிலைபாடு இந்நாட்டில் கிடையாது.
பேபூவா நியூ கினியாவில் மக்களவையை கைப்பற்ற மொத்தம் 50 கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 21 கட்சிகள் மக்களவையில் அங்கம் வகித்தன. இந்தாண்டு 25 கட்சிகள் வரை அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. பெரும்பாலான கட்சிகள் 1 அல்லது 2 மக்களவை உறுப்பினர்களை அதிகளவில் வைத்திருக்கும். எந்த கட்சிக்கு 6 முதல் 9 மக்களவை இடங்கள் கிடைக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சி பொறுப்பில் இருக்கும். இதுதான் காலங்காலமாக பேபூவா நியூ கினியாவில் இருந்து வரும் நடைமுறை. கடந்த 6 வாரங்களாக தேர்தல் பரப்புரை நடந்து வந்தது. இன்றிலிருந்து மூன்று வாரங்களுக்கு பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஆகஸ்டு மாதம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.