இரண்டாவது அலையின் தாக்கத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியாவில் நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படும் மோசமான நிலை நிலவி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் இதே நிலை தொடர்ந்து வந்த நிலையில், புதன்கிழமையன்று மிகக் கொடூரமாக உச்சபட்ச மரணங்களை பதிவு செய்த இந்தியா ஒட்டு மொத்த மரண எண்ணிக்கையான 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் அத்தியாவசிய மருத்துவ தேவைகள் மற்றும் இறுதிச்சடங்கு மைதானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் உலக அளவில் ஒரே நாளில் மிக அதிக தொற்று உறுதியான நாடாக இந்தியா மாறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த பாதிப்பு 1 கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதே போன்று உயரிழப்பிலும் மிக மோசமான நாளாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகரான டெல்லியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுவதற்காக ஆம்புலன்ஸ்கள் வரிசையில் காத்திருக்கின்றன. பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள் எல்லாம் தற்போது பிணங்களை எரிக்கும் இடங்களாக மாறியுள்ளன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளோர் நகரின் சீக்கிய கோயில் பகுதியில் விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டருக்காக திரண்டனர். டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கிறது, என்றாலும் அதனை சரிசெய்ய முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆக்சிஜன் டேங்கில் இருந்து அலாரம் அடிக்கும் வரை குறைந்தபட்ச ஆக்சிஜனை வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதையும் கடக்க வேண்டிய கொடூர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக டெல்லி Artemis மருத்துவமனை மருத்துவர் தேவ்நிலா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர்களின் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இரண்டாம் அலை மிகவும் கொடூரமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகத் தீவிர தொற்று நோயாக மாறியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது என்றும், மிக அதிக அளவில் ஐசியூ வார்டுகள் தேவைப்படுவதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் விபத்துகளும் தலைநகரில் தவிர்க்க முடியாத ஒன்றாகி மாறி போயிருக்கிறது. ஆக்சிஜன் டேங்கரில் எற்பட்ட கசிவு காரணாமாக 22 உயிரிழந்த பரிதாபம் மருத்துவமனை ஒன்றில் நடந்தது.
இந்நிலையில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருந்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர் உள்ளிட்டவை டெல்லிக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக தைவானில் இருந்து ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது. தொற்று தீவிரம் காரணமாக இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி அமெரிக்கா அனுப்பவுள்ள மருத்துவ பொருட்கள் அடங்கிய கப்பல் குறித்து விளக்கமளித்தார்.
இந்தியா எதிர்கொண்டுள்ள மிக மோசமான சவாலை சமாளிக்க தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3gLZ418