பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களின் ஆதரவைப் இம்ரான்கான் கோரியிருந்தார்.
இதனிடையே வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக பாராளுமன்றம் கூடிய நிலையில் வாக்கெடுப்பை நடத்தாமலேயே ஆட்சியை கலைத்து அதிபர் ஆரிப் அல்வி உத்தரவிட்டார். முன்னதாக தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான் தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் சதித்திட்டம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
அமெரிக்காவின் கொள்கை மற்றும் பிற நாடுகள் மீதான அமெரிக்க கொள்கையை தாம் விமர்சித்து வருவதாக தமது அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க சதி செய்ததாக இம்ரான் கான் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளி ஆட்கள் அல்ல என்றும் இம்ரான் கான் கூறினார்.
அதே நேரத்தில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசியல் அமைப்பின் 5 ஆவது பிரிவின்படி ஒரு எதிரான நடவடிக்கை என்றும் துணை சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று அதிபர் ஆட்சியைக் கலைக்கும் பட்சத்தில் புதிய பிரதமர் பொறுப்பை ஏற்கும் வரை காபந்து பிரதமராக இம்ரான்கான் தொடருமாறு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயாராகுமாறு இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தை தணிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான ஷபாஸ் ஷெரீஃபால் மார்ச் 28 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
69 வயதான இம்ரான் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஒரு புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடும், சில வாக்குறுதிகளோடும் 2018ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றார்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்தன.
இதையடுத்து பாகிஸ்தான் அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்பட்டது. 90 நாட்களில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இம்ரான் கான் பிரதமராக இருப்பார் என்றும் தகவல்கள் வந்தன. பாகிஸ்தான் மக்களே புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும். தங்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானம் செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் முன்பு குறிப்பிட்டு இருந்தார்.
Link Source: https://ab.co/3x1TmR5