அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் முக்கிய தூணாக இருக்கும் என்றும், அதனை கட்டுப்படுத்தும் இடத்தில் ஆஸ்திரேலிய அரசு இருப்பது அவசியம் என்றும் தொழிலாளர் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான அந்தோனி அல்பனீஸ் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தொழிலாளர் கட்சி என்றாலும் எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உடனான கூட்டு ஒப்பந்தத்தை நிச்சயம் தொடரும் என்று அல்பனீஸ் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உடனான கூட்டு ஒப்பந்தம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு தேவையான அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட உள்ளன. முன்னதாக பிரான்சுடன் போடப்பட்ட 90 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.
கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அங்கு அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். மேலும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர் பருவநிலை மாற்றம், தீவிரவாத தடுப்பு, கொரோனா முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸ் ஆஸ்திரேலியா மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஜாங்க ரீதியிலான எந்தவிதமான தகவல் பரிமாற்றத்தையும் ஆஸ்திரேலியா மேற்கொள்ளவில்லை என்றும், ஊடகங்கள் வாயிலாகவே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பது சரியானது அல்ல என்றும் ஆஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதர் விமர்சித்துள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உடன் கைகோர்த்துள்ள ஆஸ்திரேலியாவின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. மேலும் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் பகிர்ந்துகொள்வது, நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் தொடர்வதையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Link Source: https://bit.ly/3ofdn1V