நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நரவீனா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கத்தியுடன் அடையாளம் தெரியாத நபர் வீட்டுக்குள் புக முயற்சிப்பதாக காவல்துறைக்க அழைப்பு வந்துள்ளது.
உடனடியாக வரிங்கையா சாலையில் உள்ள அந்த வீட்டுக்கு சென்ற காவலர்கள் அந்த நபரை தடுக்க முயன்றதாக காவல்துறை துணை ஆணையர் லியன் முக்கூஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த நபர் தன்னை தடுக்க முயன்ற காவலரின் கையில் கத்தியால் குத்தியதுடன், தீ தடுப்பு கலனால் காவலரின் தலையிலும் அடித்துள்ளார். மேலும் அவர் மீது அந்த உபகரணத்தை தூக்கி எறிந்துள்ளார்.
இதை பார்த்த மற்றொரு காவலர் அந்த நபரின் முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டதாகவும் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும், தங்களை தற்காத்துக்கொள்ளவும் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த காவலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த நபருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் துணை ஆணையர் லியன் முக்கூஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3pLVyGG