உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், வைரஸ் பாதிப்பு சுனாமியைப் போல பரவத் தொடங்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom தெரிவித்துள்ளார். டெல்டாவை தொடர்ந்து ஒமைக்ரான் பாதிப்பு பல்வேறு நாடுகளில் அடுத்த அலை உருவாவதற்கான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதி வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் பாதிப்பு அமெரிக்கா, டென்மார்க்,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புதிய பாதிப்புகளை நாள்தோறும் பதிவு செய்து வருகிறது என்றும், இது பத்து மில்லியன் அளவுக்கு இரண்டாவது முறையாக பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்டா விட மிக அதிக அளவில் பரவி வருவதாகவும், ஒமைக்ரான் பாதிப்பு குறித்த உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.
இதே வேகத்தில் தொற்று பரவினால், டெல்டா மற்றும் ஒமைக்ரான் திரிபுகளால் உலகில் கொரோனா சுனாமி அலை ஏற்படும் என்று தெரிவித்த டெட்ராஸ் அதேநாம், 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது 70 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை நாம் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
உலகின் பணக்கார நாடுகள் மாஸ்க், சிகிச்சை கருவிகள், நோயறிதல் கருவிகள் மற்றும் தடுப்பூசி போன்றவற்றைப் பதுக்கி வைத்துக் கொள்கின்றன. இது அடுத்தடுத்த புதிய வகை கொரோனா உருவாகக் காரணமாகி பேரபாயத்திற்கு வழிவகை செய்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாகவே தற்போது கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது என்றும் Tedros Adhanom சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சுமார் 18 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு 35 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக தொற்று பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Link Source: https://bit.ly/3sQejwm