நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 2 ஆண்டுகளில் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள், குழந்தை பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் செவிலியர்கள் கடும் பணிச்சுமை ஆளானதாகவும், அதேநேரத்தில் செவிலியர் பற்றாக்குறை காரணமாக கூடுதலாக அவர்கள் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் ஊதிய வரன்முறை செய்யப்படாத காரணத்தால் ஏராளமான செவிலியர்கள் பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முழுவதும் சுகாதார கட்டமைப்பில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் John Murphy போராட்டத்தை கைவிடுமாறு கடிதம் எழுதி இருந்த நிலையில், உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக செவிலியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் Brett Holmes அறிவித்திருந்தார். இதனை எடுத்து CBD கட்டிடம் அருகே ஒன்றுகூடிய செவிலியர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார கட்டமைப்புகளில் செவிலியர்களின் போராட்டம் காரணமாக பெருமளவு பணிகள் பாதிக்கும் என்றும், நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்றும் தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard உடன் செவிலியர்கள் கூட்டமைப்பு நடத்திய அவசரகால ஆலோசனையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் செவிலியர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டாலும் செவிலியர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக மாகாணம் முழுவதும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்ட நிலையில் போராட்டத்தை பின்வாங்க தாங்கள் தயாராக இல்லை என்று செவிலியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் Brett Holmes கூறியுள்ளார்.
செவிலியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் அதிருப்தி அளிப்பதாகவும், அதே நேரத்தில் அவர்களை பாதிக்காத வகையில் போதுமான அளவுக்கு செவிலியர்களை பணியில் அமர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard கூறியுள்ளார். இதேபோன்று மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவிலியர்கள் தங்களது பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்த நிலையில் ஆங்காங்கே ஒன்று கூடி தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத் துறை விரைவில் பணியாளர் பற்றாக் குறையை போக்கும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3oPvwmC