கோவிட் 19 – கொரோனா வைரசின் புதிய திரிபு வகையான ஒமைக்ரான் – B.1.1.529 தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கி உள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. கொரோனா வைரசின் 5-வது திரிபு வகை வைரசாக ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகவும் WHO கூறியுள்ளது.
இதனையடுத்து சர்வதேச எல்லைகளை மீண்டும் மூடுவதற்கு ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார். புதிய வகை ஒமைக்ரான் வைரஸின் பிறப்பிடம் குறித்து நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அதே நேரத்தில் இது மற்ற வகை வைரசை காட்டிலும் அதி வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.
வார இறுதி நாட்களில் ஆஸ்திரேலியாவில் பதிவான தொற்று பாதிப்புகளை தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்க ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வார இறுதி நாட்களில் இருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மூன்றாவதாக திங்கட்கிழமை ஒருவருக்கு தொற்று பாதித்தது.
நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, ஹாங்காங், ஆஸ்திரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு நாடுகளும் தென் ஆப்ரிக்காவுக்கான தங்களது சர்வதேச எல்லைகளை மூடி வருகிறது. இஸ்ரேல் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் ஆன எல்லைகளை மூடியுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிட்னியில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நபருக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது. இரண்டாவதாக Northern Territory-ல் இருந்து வந்து Howard Springs -ல் தங்கியிருந்த நபர் ஒருவருக்கும் மைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கான எல்லைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, லெசெதோ, ஜிம்பாப்வே, நமீபியா, ஷீஷெல்ஸ், மாலாவி, மொசாம்பிக், ஈஸ்வட்னி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோன்று நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, ACT மாகாணங்கள் தங்களது பயண கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் உடனடியாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
Link Source: https://ab.co/3lDXO23