மெல்பேர்னின் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூலின் ஊசி செலுத்தாமல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அதில் முதற்கட்டமாக அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதற்கான டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய கணையம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. அதிலிருந்த குருத்தணுக்களை (ஸ்டெம்செல்) எடுத்த ஆய்வாளர்கள், புற்றுநோய்க்கான மருந்துகளைப் பயன்படுத்தி செயலற்ற உயிரிகளை செயல்பட வைத்துள்ளனர். அதன்மூலம் மீண்டும் உயிர் பெற்ற உயிரிகள் போதுமான இன்சூலினை உற்பத்தி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனாஷ் பல்கலைக்கழகத்தின் நீரிழிவு துறையைச் சேர்ந்த மருத்துவர் கீத் அல்-ஹசானி கூறுகையில், இதற்கு சாத்தியத்துக்குட்பட்ட சிகிச்சை முறைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் தொலைதூரம் செல்லவேண்டும். ஒருவேளை அடுத்தடுத்த ஆய்வுகளும் தொடர்ந்து வெற்றி அடையும் பட்சத்தில், நீரிழிவு நோயாளிகளின் நிலைமையை இந்த ஆய்வு முடிவுகள் மாற்றியமைக்கும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், உலகளவில் டைப் 2 நீரிழிவு நோயைக் கண்டறியும் விகிதம் அதிகரித்து வருவதால், அதற்குரிய சிகிச்சை முறைகளை கண்டறிவது அவசியமாகியுள்ளது. அனைத்து வகையான நீரிழிவு நோய்களுக்கும் பொருந்தக்கூடிய நீடித்த சிகிச்சையை உருவாக்குவதற்கான முதல் அடி வெற்றி அடைந்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவர் கீத் அல்-ஹசானி தெரிவித்துள்ளார்.