ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் தொற்று பரவல் அதிகரித்தை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் விக்டோரியாவில் இருந்து தங்கள் மாகாணங்களுக்கு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசுகள் நடைமுறை படுத்தியுள்ளன.
அதன்படி கடந்த 6 நாட்களாக விக்டோரியா மாகாணத்தி புதிதாக எந்த தொற்றும் கண்டறியப்படாததால் சுகாதாரத்துறை அதிகாரிகள், சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
திங்கட்கிழமை மட்டும் சுமார் 13, 176 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 15,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை 20,000 வரை உயர்த்தப்படும் என்று கோவிட் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெரோன் வெய்மர் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், இரு நாட்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விக்டோரியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தங்கள் நாட்டிற்குள் வரும் விக்டோரிய வாசிகளுக்கு 14 நாட்கள் தனிமை அவசியமில்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
அதே போன்று தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களும் தங்கள் எல்லை கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால், இம்மாத இறுதியில் நடைபெறும் ஏ.எப்.எல் மற்றும் என்.பி.எல் இறுதி போட்டிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை முதன்மை அதிகாரி பிரெட் சுட்டன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை விக்டோரிய முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விக்டோரியாவிற்கு தேவையான தடுப்பூசியை வழங்குவது குறித்த எந்த இறுதி முடிவையும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கவில்லை என்றும், பைசர் தடுப்பூசி கொள்முதலில் மத்திய அரசு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரி லிசா ஷ்கோபீல்ட், பைசர் நிறுவனம் தடுப்பூசி வழங்குவது குறித்து எந்த உறுதியான முடிவையும் கடந்த காலங்களில் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜேம்ஸ் மெர்லினோ குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலர் பிரெண்டன் மர்பி, மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், முதல் டோஸ் செல்த்தப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட தடுப்பூசி மூன்று வாரத்தில் மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.