நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் கடும் நெருக்கடியான சூழலில் பணியாற்றிவரும் செவிலியர்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு கடைசி நேரத்திற்கு முன்னதாக மாகாண அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆணையர் John Murphy கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த உத்தரவில் பல்வேறு சுகாதார அமைப்புகளில் பணியாற்றி வரும் செவிலியர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்த தொழிலாளர் நலத்துறை ஆணையர் John Murphy, உடனடியாக போராட்டம் திரும்பப் பெற்றதாக தங்களது இணைய தளங்கள் மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த விவகாரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியிருக்கும் நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நடந்திருந்தால் மாகாணம் முழுவதும் பெருமளவில் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் நோயாளிகள் அவதிப்பட்டு இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டது மிகவும் காலதாமதம் ஆனது என்று செவிலியர்கள் கூட்டமைப்பு புகார் கூறியுள்ளது. போராட்டத்தின் கடைசி நிமிடத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிடுவது, தங்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக செவிலியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் Brett Holmes கூறியுள்ளார். மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்ய தயாரான நிலையில் தற்போது அரசு இந்த விவகாரத்தில் தலையிடுவது அரசியல் விளையாட்டாக பார்க்கப்படுகிறது என்றும் Brett Holmes குற்றம்சாட்டி உள்ளார்.
தங்களது நிலைப்பாட்டை உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்க செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் Brett Holmes தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் கோவில் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததாகவும் மருத்துவ கட்டமைப்பில் எந்தவித மாற்றங்களையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் முதியோர் பராமரிப்பு, மருத்துவமனைகள், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவிலியர்கள் மேற்கொண்ட பாதிப்புகளை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் செவிலியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Link Source: https://ab.co/3gNG5SQ