ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு, ஆஸ்திரேலிய மக்களின் மனநிலையை ஆராய முடிவு செய்தது. மக்களின் மனநலம் மற்றும் அவர்களுடைய நல்வாழ்வு குறித்தான கேள்விகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சமூகத்தில் மனநல நிலைமைகளின் பரவல் மற்றும் அதனுடைய தாக்கம் முன்பை விட அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக மனநலம் சார்ந்த பிரச்னைகள் இளைய தலைமுறையினரிடையே அதிகம் நிலவுவதாகவும், அதிலும் பெண்கள் குறிப்பிட்டளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடத்தப்பட்டது. இதற்காக 16 முதல் 65 வயதுக்குட்பட்ட 5500 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்மூலம் பல்வேறு மனநலம் சார்ந்த பாதிப்புகள் சமூகத்தில் தொற்றுநோய் போல பரவியுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக மூன்றில் ஒரு இளம்பெண் மனநல பாதிப்புக்குள்ளாவது தெரியவந்துள்ளது. அதேபோல நான்கில் ஒருவர் மனநல ஆலோசகரிடம் சிகிச்சை எடுத்து வருவதும், மற்ற மூவருக்கு தாங்கள் மனநல பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
முதன்முறையாக இந்த ஆய்வில் தங்களை தாங்களே வருத்திக்கொள்ளுதல் மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு உள்ளாகுதல் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 9 சதவீதத்தினர் தங்களை தாங்களே வருத்திக் கொண்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை பெண்களில் 14 பேரில் ஒருவராக உள்ளது.
அதேபோல இரண்டு பேரில் ஒரு ஆஸ்திரேலியர் தங்களுக்கு தெரிந்தவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர், 20 பேரில் ஒருவர் தங்களுக்கு நெருக்கமானவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனதாக கூறியுள்ளனர், 6 பேரில் ஒருவருக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன, 20 பேரில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் என ஆய்வின் மூலம் தெரியவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மனநல ஆரோக்கியம் தொடர்பாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வின் முதல் தகவல் அறிக்கையாக இது வெளியாகியுள்ளது. முழுமையாக இவ்வாய்வு முடிவடையும் போது, அது நாட்டையே உலுக்குவதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனநலக் கோளாறு ஏற்படுவதற்கு தொற்று நோய் பரவல் மற்றும் இயற்கை பேரழிவுகள் முக்கியக் காரணிகளாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.