சமீப காலங்களில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அதிகரித்து வருவது தொடர்பாக அதீத அழுத்தம் தரப்பட்டது. இந்நிலையில் Respect@work report அளித்த அறிக்கையில் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இடம்பெற்றுள்ள 55 பரிந்துரைகளையும் ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்வதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
பணியிட சீர்திருத்தங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் எம்.பிக்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரும் சமமாகவே நடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பல்வேறு பரிந்துரைகளை பெற்ற அரசு நீண்ட காலமாக காத்திருந்த நிலையில் Respect @workplace தற்போது அறிக்கை அளித்துள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள 55 பரிந்துரைகளையும் தனது அரசு ஏற்றுக்கொள்வதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். பாலின பாகுபாடு ஆணையர் Kate Jenkins 18 மாத காலம் நடத்திய ஆய்வின் உச்சமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பணியிடங்களில் Kate Jenkins இயல்பாகவும், பரவலாகவும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பல்வேறு தரவுகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
Jenkins தனது அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் அளித்த நிலையில் அதில் இருந்த பரிந்துரைகளை பரிசீலனை செய்ய அரசு அவகாசம் எடுத்துக் கொண்டது. அதே நேரத்தில், பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும், பாலியல் ரீதியான துன்புறத்தல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இது அநீதியானதோ, அறுவெறுக்கத்தக்கதோ அல்லது குற்றம் மட்டுமே அல்ல. பெண்களின் தனிநபர் பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பை குறிவைக்கும் ஒன்றாக மாறி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிடங்களில் எழும் புகார்கள் குறித்து எடுக்கப்படும் சட்டப்பூர்மான நடவடிக்கை எளிதானதாகவும் அதே நேரம் மிக வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டவரைவு மேற்கொள்ளப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் Michaelia கூறியுள்ளார். இதில் உள்ள சிக்கல்களை களைந்து உறுதியான நடவடிக்கைகள் நாடுமுழுவதும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்கள் எழுந்தால் அதிலிருந்து விலக்கு பெற்றிருந்த அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரும் தற்போது புதிய சட்டத்தால் நடவடிக்கை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
புகார்கள் மீதான கால அவகாசம் ஆறு மாத காலத்தில் இருந்து இரண்டு ஆண்டு காலம் நீட்டிக்கப்படும் என்றும், பாதிக்கப்படுவோர் முன்வந்து விசாரணையை எதிர்கொள்ள போதிய அவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.