வடக்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
மேலும் அடுத்து வரும் சில நாட்களில் இயல்பைவிட 180 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என்பதால் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளத்தால் இப்போதே தனித் தீவுகளாக துண்டிக்கப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மத்திய வடக்கு கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டிய சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் அங்கு இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் மாகாண அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து தற்போது தெற்கு பகுதிக்கும் மழை பாதிப்புகள் மாறத் தொடங்கி இருப்பதாகவும் இது மேலும் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவசர சேவை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கு தெற்கு பகுதிகளில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட முக்கியமான நீர்நிலைகள் நிரம்பி வழியும் அபாயம் உள்ளதால் கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மாகாண அவசர சேவை மையம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய உதவிகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டு இருப்பதாகவும் தற்காலிக பிரீமியர் கூறியுள்ளார். Alstonville பகுதியில் அதிகபட்சமாக 201 மில்லி மீட்டர் மழையும், Smoky Cape பகுதியில் அதிகபட்சமாக 160 மில்லி மீட்டர் மழையும், Brunswick பகுதியில் 100 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/36sNMwh