இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் அதிக பாதிப்புகள் இருந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் தினசரி நோய் தொற்று 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வந்தது. அந்தவகையில் மே 21-ந் தேதியன்று 36 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதுவே 2-வது அலையில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்தது.
அதன்பிறகு ஜூன் மாதம் முதல் தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது. அந்த வகையில் ஜூன் 7-ந் தேதியன்று தினசரி நோய் தொற்று 20 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.
கடந்த மாத இறுதியில் பாதிப்பு மேலும் குறைந்து இருந்தது.
கடந்த ஜூலை 1-ந் தேதியன்று 4,481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் குறைந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் 3,031 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று அது 3 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. நேற்று 2,913 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வந்த நிலையில், குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
அதன்படி கடந்த 4-ந் தேதி அதிகபட்சமாக 33 ஆயிரத்து 646 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கடந்த மே மாத இறுதியில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 1,781 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை மளமளவென குறைந்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரப்படி 32 ஆயிரத்து 767 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி கடந்த 40 நாட்களில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த போதிலும் கடந்த மே மாதம் தினசரி உயிரிழப்புகள் அதிகளவில் இருந்தன.
மே 30-ந் தேதியன்று அதிகபட்சமாக 493 பேர் பலியாகி இருந்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. மாநிலம் முழுவதும் இதுவரை 33 ஆயிரத்து 371 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 8 ஆயிரத்து 256 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
Link Source: https://bit.ly/2TdJLVR