நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட தீவிர ஆலங்கட்டி மழையின் காரணமாக ஏராளமான பொருட்களும் உடமைகளும் சேதமடைந்துள்ளது குறிப்பாக
கடந்த புதன்கிழமை காப் துறைமுகப்பகுதியில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழையின் காரணமாக பல மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் வாசிகளும் அத்தொகுதியில் எம்பியுமான Gurmesh Singh வேதனை தெரிவித்துள்ளனர்.
பனிக்கட்டி ஒவ்வொன்றும் ஒரு கோல்ஃப் பந்து அளவுக்கு இருந்ததாகவும் இதன் காரணமாக ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் கடும் சேதம் அடைந்து இருப்பதாகவும் தெருவிளக்குகள் உடைந்து இருப்பதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதுபோன்ற ஒரு அழிவை ஏற்படுத்தும் ஆலங்கட்டி மழையை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று அந்த பகுதி வாசிகள் அச்சத்துடன் விவரிக்கின்றனர்.
ஆலங்கட்டி மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் கணக்கிடப்பட்டு வருவதாகவும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் அவசர உதவி மையத்திற்கு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
தற்போது 800 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாகவும் இவற்றில் பெரும்பாலானவை மேற்கூரைகள் சேதமடைந்தது குறித்தே என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சேத விவரங்களை கணக்கிட்டால் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது தெரிய வரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காப் துறைமுக எம்பி குர்மீத் சிங் இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் இதன் காரணமாக தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலங்கட்டி மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தேசிய காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3m1LSrg