மெல்போர்னை சேர்ந்த Juliet Wilson தீவிரமான மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே கனடாவில் சிக்கித் தவிக்கும் தனது கணவரை கருணை அடிப்படையிலான பயண அனுமதியோடு ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று Juliet Wilson கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய வகை டெல்டா வைரஸ் பரவல் காரணமாக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேசிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஒரு சில பயணிகள் மட்டுமே சிறப்பு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அது போன்ற சிறப்பு அனுமதியோடு தனது கணவரை ஆஸ்திரேலியா வர அனுமதிக்க வேண்டும் என்றும் ஓட்டலில் தனிமைப்படுத்துதல் முடித்து தன்னுடைய அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தான் அவரை சந்திக்க வேண்டும் என்று Juliet Wilson கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் அவர் ஒருவர் மட்டுமே தன்னோடு இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் ஜூலியட் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 31-ஆம் தேதி சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட விர்ச்சுவல் முறைப்படி Juliet Wilson – David Macneill ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் டேவிட் கனடாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் தனது வயதான தாயை கவனித்துக் கொண்டு இருப்பதால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே சர்வதேச எல்லைகள் மூடப்பட்ட நிலையில் இருவரும் சந்திப்பதில் தடை ஏற்பட்டது. டேவிட் 2 டேஸ் தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டுள்ள நிலையில் அவர் ஆஸ்திரேலியா வந்து ஜூலியட் உடல்நிலையை கவனித்து விட்டு பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கனடா திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே புற்றுநோய் தன்னை அரித்து தின்று கொண்டிருப்பதாகவும், கருணை அடிப்படையில் தனது கணவர் ஆஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நான்குமுறை நிராகரிக்கப்பட்டதாக ஜூலியட் கவலையுடன் கூறியுள்ளார். இரட்டை mastectomy சிகிச்சை வழங்கப்பட உள்ள நிலையில் தனது உடல்நிலையை மட்டுமல்லாது தனது உணர்வுபூர்வமான பிரச்சனைகளுக்கும் ஆதரவாக தனது கணவர் இருக்க வேண்டுமென தான் கோருவதாக Juliet Wilson உருக்கமுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
டேவிட் சிறந்த மனிதநேயம் மிக்க பண்பாளர் என்றும் அவர் தனது காதல் கணவர் என்றும் அவர் உடனடியாக தன்னிடம் திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஜூலை 12ஆம் தேதிக்கு முன்னதாக அவர் ஆஸ்திரேலியா திரும்பும் பட்சத்தில் இரண்டு வார ஹோட்டல் தனிமைப்படுத்துதல் முடித்து விட்டு தன்னுடைய அறுவை சிகிச்சை காலத்தில் தன்னோடு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே கருணை அடிப்படையில் சிலரை நாட்டிற்கு வரவழைப்பதற்கு அனுமதி இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்றும் விக்டோரிய சுகாதாரத்துறை Martin Foley அமைச்சர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பயண தடையில் இருந்து விலக்கு அளிப்பதற்கான தொடர்புகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Link Source: https://ab.co/3hgNcEk