கொசுக்கடி மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் மலேரியா நோய் ரத்த சிவப்பணுக்களை முற்றிலுமாக ஆக்கிரமித்து அதன் செயல்பாடுகளை பாதித்து உயிரிழப்பு வரை கொண்டு சொல்லும். அதே நேரத்தில், மலேரியா ஒட்டுண்ணிகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் மண்ணீரலில் மறைந்திருந்து படிப்படியாக வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும் என்று அறிவியலாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபாடு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே போன்று இதற்கு முந்தைய பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் வகைகளில் மலேரியா முக்கியமான ஒன்று. கொசுக்கடி மூலமாக ரத்தத்தில் பரவும் மலேரியா, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அது உயிரிழப்பு வரை கொண்டு செல்லும்.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன் மற்றும் PLOS Medicine ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தான் இது தெரியவந்துள்ளது. மலேரியா பாதிப்பு ஏற்பட்ட உடன் அல்லது அது வந்து சென்ற பிறகும் முழுமையாக ரத்தத்தில் கலந்து அதன் தீவிரத்தை அதிகரிப்பதில்லை மாறாக மண்ணீரல் போன்ற ரத்தத்தை சுத்திகரிக்கும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யும் இடத்தில் மறைந்து இருந்து அது படிப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது என்பது ஆய்வு முடிவுகளின் வழியாக தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் மலேரியா வந்து குணமடைந்து இருந்தாலும் அவர்கள் நோய்த்தொற்றை பரப்பக் கூடியவர்களாக இருப்பார்கள் என்றும் அவர்களை கடித்த கொசு மற்றொருவரை கடிக்கும் போது மலேரியா பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள திமிகா பகுதியைச் சேர்ந்த 22 பேரின் மண்ணீரல் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அகற்றப்பட்டது. இந்நிலையில் அதனை பரிசோதித்தபோது அதில் மலேரியா பாதிப்பை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஒட்டுண்ணிகளின் வாழ்நிலை தொடர்பான பல்வேறு ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவை மண்ணீரல் போன்ற உறுப்புகளில் எவ்வளவு காலம் வாழும் தன்மை கொண்டது என்பதை உறுதி செய்வதற்கான அடுத்தகட்ட ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Link Source: https://ab.co/3yUjRqa