நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், இதுவரை 11 பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து மாநிலத்துக்குள் வந்தவர்கள். மீதமுள்ள 2 பேருக்கு உள்நாட்டிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் குரங்கம்மை பரவி வருவதை சுகாதார அமைச்சர் ஜெரிமி மெக்னால்டி உறுதி செய்துள்ளார்.
இந்நோய் பாதிப்பு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களிடையே அதிகம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, அரிப்பு, பிறப்புறுப்பில் புண், ஆசனவாய் அருகே கொப்பளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்கள் சுகாதார மையத்தை நாட வேண்டும் என்று அமைச்சர் ஜெரிமி கூறியுள்ளார். மேற்சொன்ன அறிகுறிகளுடன் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் மையங்களை யாராவது நாடினால், அவர்கள் தொடர்பான விபரங்களை மாநில சுகாதார மையங்களுக்கு மருத்துவர்கள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நோய்க்கான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் நிச்சயம் முகக்கவசம் அணியவேண்டும் என்பதையும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு கட்டாயமாக்கியுள்ளது.
தோள் மூலம் பரவக்கூடிய குரங்கம்மை வைரஸ், மூச்சு குழாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. குறிப்பிட்ட அறிகுறி கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயம். முக்கியமாக அவர்கள் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 14 நாட்கள் கழித்து, வைரஸின் அறிகுறிகள் தெரியவரும். உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்று நியூ சவுத் வேல்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.