தாஸ்மானியா பாராளுமன்றத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் லிபரல் கட்சியின் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் பின்னணியில் முனகிக் கொண்டிருந்ததாகவும், இதுகுறித்து அவர்கள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் எதிர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த சில நாட்களிலும் கேள்வி நேரத்தின்போது பேசுகையில் ஆளும் கட்சி எம்பிக்கள் பின்னணியில் குரல் எழுப்பியதாக இது பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து ஒட்டுமொத்தமாக அரசுத்தரப்பில் தான் மன்னிப்பு கோருவதாக தாஸ்மானியா ப்ரீமியர் Peter Gutwein தெரிவித்திருந்தார்.
இதேபோன்று மாகாணத்தில் கல்வித்துறை அமைச்சர் Roger Jaensch தனிப்பட்ட முறையில் தனது மன்னிப்பை மன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தாஸ்மானியாவின் அட்டர்னி ஜெனரல் Elise Archer உள்கட்டமைப்பு துறை அமைச்சர் Michael Ferguson இருவரும் வேண்டும் என்று அந்த சூழலை கெடுக்கும் நோக்கில் சத்தம் எழுப்பியதாகவும், எனவே அவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை உணர்ந்து தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அட்டர்னி ஜெனரல் Elise Archer, பாராளுமன்றத்தில் பிரீமியர் Peter Gutwein நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி விட்ட பிறகும் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிடிவாதம் பிடித்து வருவது திகைப்பூட்டும் நடவடிக்கையாக இருப்பதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் இருவரும் தங்களது தவறை உணரும் வகையில் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருவது ஒன்றே அவர்கள் இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதற்கான ஒரே வழி என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
அரசு தரப்பில் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் ப்ரீமியர் மன்னிப்பு கோரிய பிறகும் இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருவதாக ஆளும் அரசு தரப்பு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
Link Source: https://ab.co/36HviaQ