மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 70 பேர் காணாமல் போய்விட்டதாக மீட்புக் குழுவினர் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம் கச்சின். இங்குள்ள ஹப்பகந்த் பகுதியில் பச்சை மாணிக்கக் கற்கள் உட்பட பல்வேறு ரத்தினக் கற்களை தோண்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி மியான்மர் நாட்டின் இருதயம் என்று கூறப்படுகிறது. இன்று காலை 4 மணியளவில் இங்குள்ள சுரங்கம் ஒன்றில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 70 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு படைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் ஆற்றில் சேற்றுடன் புதைந்து கிடக்கும் போது மீட்கப்பட்டுள்ளது. அதனால் காணாமல் போன 70 பேரும் ஆற்று நீரில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் வந்து பணிகளை துவங்கியுள்ளனர். ஆனால் யாரெல்லாம் மீட்கப்பட்டார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. உலகிலேயே மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலத்தின் ஹப்பகந்த் பகுதியில் தான் விலை உயர்ந்த மாணிக்கக் கற்கள் உட்பட பல்வேறு விலை உயர்ந்த ரத்தின கற்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Link Source: https://ab.co/3pjQ1sj